‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Tuesday 23 October 2012

பிரார்த்தனையும், அதன் ஒழுங்குமுறைகளும்....!!!!

 அவனுக்கு எதையும் இணையாக்காமல் அவனிடமே கேளுங்கள்!...

அல்லாஹ் மனிதனைப் படைத்து, அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்துள்ளான்.

அல்லாஹ் மனிதனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். ‘நீ எனக்கு மட்டுமே அடிபணிய வேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதே! ’என்பது தான் அது!

இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்து அவனிடம் பிரார்த்தனை செய்வது!

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.‘பிரார்த்தனை ஒருவணக்கமாகும் ’பிறகு, ‘என்னை அழையுங்கள்! உங்களுக்கு பதிலளிக்கிறேன். எனக்கு அடிபணிவதை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (40:60) என்ற இறை வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.
அறிவிப்பு: நுஃமான் பின் பஷீர் (ரழி) நூல்:திர்மிதி.

எனவே இந்தப் பிரார்த்தனை என்ற வணக்கத்தை வல்ல அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாத வேறு எவரிடமும் நம்முடையதேவைகளைக் கேட்கக் கூடாது என்பது தெளிவாகிறது.ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தில்பெரும்பாலான மக்கள் இந்த இறை வசனத்தற்கு மாற்றமாக சமாதி வழிபாட்டில், அவ்லியாக்கள், நாதாக்கள் என்ற பெயரில் வழிபடும் அவநிலையை காண நேரிடுகிறது.

இந்த அவல நிலைக்கு 7வருடம் அரபு மதரஸாக்களில் மார்க்கக் கல்வி பயின்ற மவ்லவி மார்களும் ஆதரவு தெரிவிப்பது, அறியாத மக்களை, நாளை மறுமையில் இறைவனுக்கு இணை வைப்பான ‘ஷிர்க்’ என்ற மாபாதக செயலை செய்ததற்கான கூலியாக நரக வேதனையில் கொண்டு போய் சேர்க்கும் என்ற உண்மையை மறைப்பது ஏன்?

"என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ‘நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்’ என்று அல்லாஹ் அல்குர்ஆன் 2:186 வசனத்தில் கூறுகின்றான்.

பிரார்த்தனையில் கடைபிடிக்க வேண்டியஒழுங்குமுறைகள்:

பிரார்த்தனை செய்யும்போது அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வ வல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் அடக்கத்தோடும், பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும்.

"உங்கள் இறைவனைப்பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ்நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)

நபி ஜகாரிய்யா (அலை) அவர்கள் இறைவனை இரகசியமாகஅழைத்துப் பிரார்த்தித்தார். (அல் குர்ஆன்19:3)

அச்சத்துடனும் உறுதியான நம்பிக்கையுடனும் அல்லாஹ்வை மட்டும் பிரார்த்தனைசெய்யுங்கள் ‘நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.’ (அல்குர்ஆன் 7:6)

வலியுறுத்திக்கேட்பது:

அல்லாஹ்விடம்பிரார்த்தனை செய்யும் போது ‘நீ விரும்பினால் தா! இல்லையென்றால் தர வேண்டாம்’ என்பது போன்று கேட்கக் கூடாது. மாறாக,‘இதை நீ தந்து ஆகவேண்டும் உன்னால் தான் தரமுடியும். வேறு யாராலும் தரமுடியாது ’என்று வலியுறுத்திக் கேட்கவேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் பிரார்த்தனை செய்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்குவழங்கு! என்று கேட்க வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது அல்லாஹ்வை நிர்பந்திக்காது. ஏனெனில் அவனை (அல்லாஹ்வை) நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை. அறிவிப்பு: அனஸ் (ரழி) நூல்: புகாரி.

பாவமானதைக் கேட்கக்கூடாது:

அல்லாஹ்;வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.‘நான்பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை’ என்று மனிதன் கூறுகின்றான். உறவை துண்டிக்கும் விஷயத்திலும் பாவமானவற்றிலும் பிரார்த்தனை செய்தால் அது அந்த அடியாருக்கு (பிரார்த்தனை செய்பவருக்கு) பதில் அளிக்கப்படாது.
அறிவிப்பு: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்

அவசரப்படக்கூடாது:

பிரார்த்தனைசெய்யும்போது அவசரப்படக்கூடாது. பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஓரிருமுறை மட்டும் கேட்டு விட்டு,நான் பிரார்த்தனை செய்தேன் எனக்கு இறைவன் எதுவும்தரவில்லை என்று கூறி பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக்கூடாது.

இத்தகையஎண்ணத்துடன் பிரார்த் தனை செய்தால் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது ‘நான்பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப் படவில்லை என்று கூறி நீங்கள்அவசரப் படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்க ப்படும்’. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹுரைரா (ரழி) நூல்:புகாரி.

நிராசை அடையக்கூடாது:

சிலர் பிரார்த்தனைசெய்து கொண்டே இருப்பார்கள் அவர்கள் கேட்கும் அந்த காரியம் நிறைவேறவில்லையென்றால்அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைந்து விடுவார்கள். அல்லாஹ்வின் அருள் விசாலமானது. எனவே அவனது அருளில் நிராசையடையக் கூடாது.

"அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (அல்லாஹ்வை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்’ (அல்குர்ஆன் 12:87)

"என் அடியார்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்: மிகக்கருணையுடையவன் என்று (அல்லாஹ் கூறுவதை)
தெரிவிப்பீராக! (அல்குர்ஆன்-39:53)

உணவு உடை ஹலாலாக இருத்தல்:

"நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு வழங்கியுள்ள வற்றிலிருந்து தூய்மையான வற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கு
நன்றி செலுத்திவாருங்கள். (அல்குர்ஆன்-2:172)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் தூய்மை யானவன். தூய்மையானதைத்தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

"அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையே முஃமின் களுக்கும் ஏவுகின்றான் என்று கூறிவிட்டு, ‘தூதர்களே! நல்ல பொருள் களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள். (ஸாலி ஹான) நல்ல அமல்களைச் செய்யுங்கள்! நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன். (அல்குர்ஆன்-23:51)

ஒரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
‘அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடையதலை புழுதிபடிந்த பரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின்பால் கைகளை உயர்த்தி,எனது இறைவனே! எனது இறைவனே! என்று அழைக்கின்றான். அவனது ஆடை அவனது உணவுஅவனது குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனோ ஹராமில் மூழ்கிவிட்டான். இந்த நிலையில் அவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்

அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் கருணையுள்ளவன்.
அந்த அடியான் வெளித்தோற்றத்தை வைத்துக்கொண்டு அவனுடைய அறியாமையினால் தீங்கு தரக்கூடியதைக் கேட்பான். உதாரணமாக, தனக்கு அதிகப்படியான, செல்வம்ஃபணம் வேண்டுமென்று பிரார்த்தனை செய்வான். ஆனால் அந்த செல்வம்பணம் அவனை இறை நிராகரிப்புக்கு இழுத்துச் செல்லும் என்றிருந்தால் அதைக் கொடுக்காமல்அதைவிடச் சிறந்ததை இறைவன் கொடுப்பான்.

ஒருவன் தனக்கு ஏற்படவுள்ள ஆபத்தை உணராமல் தனது தேவையைக் கேட்கிறான். அனைத்தையும் அறிந்த அல்லாஹ் அதைக் கொடுப்பதற்கு பதிலாக அவனுக்கு வரவிருக்கும் ஆபத்தை நீக்குகிறான். அதுவும் இல்லையென்றால் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்கு பகரமாக மறுமையில் அவனது நிலையை உயர்த்துவான்.

’உறவைத்துண்டிக்காமலும் பாவமான காரியம் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்த னையை ஒரு முஸ்லிம்செய்தாலும் அவரது அந்த பிரார்த்தனை விரைவாகப் பதில் அளிக்கப்படும் அல்லது அதைஅல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகிறான் அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன? என்று நபித் தோழர்கள் கேட்டனர்.
அதற்கு ‘அல்லாஹ் அதிகமாக்குவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பு: அபூஸயீத் (ரழி) நூல்: அஹ்மத்.

ஒரு அடியான் அல்லாஹ்விடம் பிரார்த் தனைசெய்யும்போது அவனை வெறுங்கையுடன் அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகின்றான். உங்களுடைய இறைவன் சங்கையானவன் அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும்போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: சல்மான் (ரழி) நூல்: இப்னுமாஜா.

பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகள்:

கடமையான ஒவ்வொரு நேரத்தொழுகை யையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் பிராத்தனை ஏற்றுக்கொள்ளப்படும். எந்தப்பிரார்த்தனை செவியேற்கப்படும்? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரவின் கடைசியிலும், கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும் என்று பதிலளித்தார்கள். 
அறிவிப்பு: அபூஉமாமா(ரழி) நூல்: திர்மிதீ

இரவின் கடைசி நேரத்தில்:

இரவின் கடைசிப் பகுதியில் கேட்கப்படும் பிரார்த்தனை பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகளில் ஒன்று.எனவே அந்த நேரத்திலும் அதிகமாகப் பிரார்த்திக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இரவை மூன்றாகபிரித்து கடைசிப் பகுதியில் அல்லாஹ் முதல் வானத்திற்கு தினமும் இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் கேட்டால் நான் அதை ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் மன்னிப்புக் கேட்டால் நான்மன்னிக்கிறேன் என்று கூறுகிறான். அறிவிப்பு:அபூஹுரைரா (ரழி) நூல்: புகாரி 1ஃ1145

அல்லாஹ் தன்னுடைய நெறிநூலாகிய அல்குர்ஆனில் இறை நம்பிக்கை உடையவர் இரவின் கடைசிநேரத்தில் மன்னிப்பு கேட்பவராக இருப்பார் என்று கூறுகின்றான். (அல்குர்ஆன் 3:17)

ஸஜ்தாவின்போது:

ஓர் அடியான் அல்லாஹ்விடம் மிகநெருக்கமாக இருக்கும் நேரம் ஸஜ்தாவாகும். எனவே இந்த சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன்னுடைய இறைவனை நெருங்குகின்றான் எனவே ஸஜ்தாவில் பிரார்த்தனையை அதிகப்படுத்துங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்:முஸ்லிம்.

பாங்குக்கும், இகாமத்திற்கும்இடையில்:

பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அனஸ்(ரழி) நூல்: அபூதாவுத்.

தந்தை பிள்ளைகளுக்கான பிரார்த்தனையின் போது:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. 
1. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 
2. பிரயாணியின்பிரார்த்தனை. 
3.தந்தை தனது பிள்ளைகளுக்காகச் செய்யும் பிரார்த்தனை.
அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: இப்னு மாஜா

ஜும்ஆநாளில்:

வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்தநேரத்தில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தால் அதை அல்லாஹ் அவருக்குகொடுக்காமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அந்த நேரம் மிகக்குறைவானது என்பதைத் தமது கையால் சைகை காட்டினார்கள். அபூஹுரைரா (ரழி) புகாரி.

நோன்பாளி நோன்பு திறக்கும் போது:

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
மூன்று நபர்களின் பிரார்த்தனை மறுக்கப்படாது. 
1. நீதியான அரசன்!, 
2. பாதிக்கப்பட்டவர் செய்யும் பிரார்த்தனை! 
3. நோன்பாளி நோன்பு திறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை!.
அறிவிப்பு: அபூஹுரைரா (ரழி) நூல்: இப்னுமாஜா.

எனவே நாம் பிரார்த்தனை செய்யும் போது, நம்மைப் படைத்த அல்லாஹ்வை மட்டுமே அழைத்து முறையிட்டு, அவனுடன் யாரையும் கூட்டாக்காமல், பிரார்த்தனையின் போது மேற்கண்ட குர்ஆன் ஹதஃத் ஒழுங்கு முறைகளுடன் பிரார்த்திப்போமாக! வல்ல இறைவன் நம்முடைய அனைத்து பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வானாக!

பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ!

கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்க வாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்க வாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ)லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ)இல்லா அன்(த்)த. 

இதன் பொருள் :

இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்:புகாரி 6306

எச்சரிக்கை! இணைகற்பித்தால் உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்!

அல்லாஹ் கூறுகிறான்: - “எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers